தென் சீனக்கடலில் உள்ள ஜிஷா, நன்ஷா தீவுகள் சீனாவுக்கு சொந்தமானவை, அவற்றை உரிமை கொண்டாடுவது சட்டவிரோதமானது என்று வியட்நாமுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யாங் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் சீனக் கடலில் உள்ள ஜிஷா, நன்ஷா தீவுகள் தொடர்பாக புதிய சட்டத்தை வியட்நாம் செயல்படுத்த கூடாது. அவ்வாறு செயல்படுத்தினால் அது இருநாடுகளுக்கிடையே பதற்றத்தை ஏற்படுத்தும்.
அந்த இரு தீவுகளும், சீன அதிகார வரம்புக்கு உட்பட்டவை. அத்தீவுகள் மற்றும் அவை சார்ந்த கடல் பகுதி தொடர்பாக எந்தவொரு நாடும் உரிமை கோரினால் அது செல்லத்தக்கது அல்ல என்பதோடு சட்ட விரோதமானதும் கூட என்று தெரிவித்துள்ளார்.
சீனாவால் ஜிஷா, நன்ஷா என அழைக்கப்படும் தீவுகளை, வியட்நாம் பாராசெல் தீவுகள் என அழைக்கிறது. அத்தீவுகள் தனக்கு சொந்தமானவை என உரிமை கொண்டாடும் வியட்நாம் இது தொடர்பாக கடந்த ஜூன் மாதம் “வியட்நாமிய கடல் சட்டம்” என்ற புதிய சட்டத்தை உருவாக்கியது.
இதன்படி, அந்த தீவுகள் வியட்நாமின் அதிகார வரம்புக்கு உட்பட்டவை என அறிவிக்கப்பட்டன. மேலும், புதிய மீன்வள வாரியம் உருவாக்கப்பட்டது.
அவ்வாரியத்துக்கு கடல் ரோந்துப் பணியில் ஈடுபடவும், சர்ச்சைக்குரிய அப்பகுதியில் வரும் கப்பல்கள் உள்ளிட்ட எவ்வகை வாகனங்களையும் சோதனையிடவும், விதி மீறல்களை விசாரிக்கவும் அதிகாரமளிக்கப்பட்டது. இச்சட்டம் ஜனவரி முதல் திகதியில் இருந்து செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
இதற்கு பதிலடியாக, சீனாவின் ஹாய்னன் மாகாணம் கடந்த நவம்பர் மாதம் கடல் பாதுகாப்பு தொடர்பான புதிய ஒழுங்காற்று விதிமுறைகளை உருவாக்கியது. தற்போது தென்சீனக் கடல் பகுதியில் தனது ரோந்துக் கப்பல்களை சீனா உலவ விட்டுள்ளது.
வியட்நாம் தவிர பிலிப்பைன்ஸ், மலேசியா, புரூனே நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையே தென் சீனக் கடலில் உள்ள தீவுகள் தொடர்பாக எல்லைப் பிரச்னை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. |