பிரான்சில் ரோமா இனத்தைச் சேர்ந்த நாடோடி மக்கள் சாலையோரங்களிலும், நகர்ப்பகுதியிலும் கூடாரமிட்டு இருந்ததை பிரித்து விடும்படி பிரெஞ்சு அதிகாரிகள் அவர்களிடம் தெரிவித்துள்ளனர்.இடதுசாரிக் கட்சியின் ஆட்சி வந்த பின்னர் தங்களுக்கு ஜனாதிபதி ஹோலாண்டின் (Hollande) ஆதரவு இருக்கும் என்ற நம்பிக்கையில் இவர்களில் மூன்றில் இரு பங்கினர் அவரை நாடி இங்கு வந்துள்ளனர்.
ஹோலாண்ட், தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது ரோமாமக்களுக்கு வீடு கட்டித் தரப்படும் என்று உறுதியளித்துள்ளார். ஆனால் தற்போதும் முந்தைய நிலை தான் நீடிக்கிறது என்று ஐரோப்பிய ரோமா உரிமை மையத்தின் விக்டடோரியா வாசி (Victoria Vasey) ஊடகத்தினருக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைக்கான ஐரோப்பிய அமைப்பு, 2012ம் ஆண்டு 11,803 பேர் தங்களின் கூடாரங்களைப் பிரித்து விட்டு அந்தந்த இடங்களை விட்டு அகன்று விடுமாறு அரசு உத்தரவு விட்டதாகத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ரோமானியர்களின் கூடாரத்தைப் பிரித்து அவர்களை அனுப்புவது சர்வதேச மனித உரிமை மரபுகளை மீறுவதாகும் என்று ஐ.நா.வின் மனித உரிமைப் பிரிவு பிரான்சை கடுமையாக எச்சரித்துள்ளது.
இது குறித்து பிரான்சு அதிகாரிகள் கூறுகையில், அவர்கள் கூடராத்தை சுற்றி சுகாதார சீர்கேடான சூழ்நிலை இருப்பதால் நோய்த்தொற்று அபாயம் உண்டாகும் என்று அஞ்சி அவர்களை காலி செய்ததாகவும் கூறியுள்ளனர்.
ஆனால் பிரான்சு முழுவதும் கூடாரமிட்டு இருக்கும் 15,000 முதல் 20,000 வரையிலான ரோமா இனத்தாரைத் திரும்பவும் அவர்களின் தாயகமான ரோமேனியாவுக்கோ(Romania) அல்லது பல்கேரியாவுக்கோ (Bulgaria) திருப்பி அனுப்பும் முயற்சி வீண் ஆகி விட்டது. ஏனெனில் அவர்கள் மீண்டும் இங்கே வந்து விடுகின்றனர் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், இதற்கு காரணம் அவர்களுடைய நாட்டில் காலங்காலமாக நிலவி வரும் சமூக ஏற்றத்தாழ்வே ஆகும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

|