அமெரிக்காவில் 6ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன், பள்ளிக்கு துப்பாக்கியுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அமெரிக்காவில் கனக்டிக்கட்டில் உள்ள சாண்டி ஹீக் தொடக்க பள்ளியில் சமீபத்தில் வாலிபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 20 குழந்தைகள் உட்பட 28 பேர் பலியாயினர்.
இந்நிலையில் உடாவின் மேற்கு கியர்ன்ஸ் பகுதியில் உள்ள தொடக்க பள்ளியில் 6ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது மாணவன் ஒருவன் நேற்று பள்ளிக்கு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை கொண்டு வந்துள்ளான்.
அவன் பையில் துப்பாக்கி இருப்பதைப் பார்த்து பயந்துபோன 2 மாணவர்கள் இது குறித்து ஆசிரியையிடம் தெரிவித்தனர். அவர் உடனே பொலிசாருக்கு தகவல் கொடுத்தார்.
பொலிசார் விரைந்து வந்து துப்பாக்கியையும், தோட்டாக்களையும் பறிமுதல் செய்தனர். அந்த சிறுவன் தன் துப்பாக்கியில் தோட்டாவை நிரப்பவில்லை.
ஆனால் சக மாணவன் ஒருவனின் தலையில் துப்பாக்கியை வைத்தான் என்று கூறப்படுகிறது. இது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த சிறுவனிடம் விசாரித்தபோது, யாராவது தன்னை துப்பாக்கியால் சுட்டால் தற்காத்துக் கொள்ளவே தான் துப்பாக்கி கொண்டு வந்தததாகத் தெரிவித்துள்ளான்.
பள்ளிக்கு துப்பாக்கி கொண்டு வந்த மாணவனின் பெயரைத் தெரிவிக்க பொலிஸ் அதிகாரிகள் மறுத்துவிட்டனர். |