ஒண்ட்டோரியாவில் 60 வயது சூசன் ஃபிளாமுக்கு பரிசுச்சீட்டில் 50 மில்லியன் டொலர் பரிசு கிடைத்துள்ளது.ஆனால் அவரோ வாழ்க்கைக்கு பணம் முக்கியமல்ல; திடமான உடலும் மகிழ்வான மனமுமே முக்கியம் என்று கூறினார்.
டிசம்பர் 21ம் திகதி அன்று Lotto Max என்ற பரிசுச்சீட்டு நிறுவனம் நடத்திய குலுக்கலில் ஃபிளாம் வாங்கிய சீட்டுக்குப் பரிசு கிடைத்துள்ளது.
பரிசு சீட்டு கிடைத்தது எப்படி?
ஃபிளாம் தன் குடும்பத்தாருடன் விடுமுறையைக் கொண்டாட வடக்கு நோக்கி காரில் பிரயாணம் செய்து கொண்டிருந்தார்.
வழியில் ஒரு கடையில் நிறுத்தி சில பொருட்களை வாங்கியபோது இந்த பரிசுச்சீட்டையும் வாங்கினார்.
எந்திரத்தில் இந்தச் சீட்டை ஸ்கேன் செய்ததும் உடனே இந்தச் சீட்டுக்கு பரிசு கிடைத்திருப்பதை இவர் பொருள் வாங்கிய அதே கடையில் உள்ள பரிசுச்சீட்டு விற்கும் இயந்திரம் தெரிவித்தது.
வாங்கிய சில நிமிடங்களிலேயே தனக்குப் பரிசு கிடைத்ததும் ஃபிளாம் வேகமாகத் தன் கணவரை அழைத்து தனக்கு 50,000 டொலர் பரிசு கிடைத்திருப்பதை உற்சாகத்துடன் தெரிவித்தார்.
ஃபிளாமின் கணவர் பரிசுத் தொகையை எந்திரத்தில் பார்த்ததும் வியப்படைந்தார்.
50,000 அல்ல ஐம்பது மில்லியன் டொலர் பரிசு கிடைத்திருந்தது. திரும்பவும் 50 இன் அருகிலிருந்த பூஜ்யங்களை எண்ணிப்பார்த்தனர்.
இவற்றை எல்லாம் அந்தக் கடையின் கேஷியர் பார்த்துக் கொண்டேயிருந்தார்.
ஃபிளாமுக்கு இரண்டு மகள்களும் ஐந்து பேரன் பேத்திகளும் உண்டு. இவர் தன் கணவருடன் மகிழ்ச்சியாகக் குடும்பம் நடத்தி வருகிறார்.
இவர் "ஊதாரித்தனமாக நான் செலவு செய்ய மாட்டேன், இந்தப் பரிசு கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சி தான்.
ஆனால் பணத்தை விட உடல் ஆரோக்கியத்தையும் மனமகிழ்ச்சியையும் அதிக முக்கியமானவையாகக் கருதுகின்றேன்" என்றார்.


|